ஜும்ஆவுக்குப் பின் சுன்னத்


    இப்னு உமர்(ரலி) அவர்கள் ஜும்ஆ தொழுகையை நீட்டித் தொழுவார்கள். ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்களை தன் வீட்டில் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் இதை செய்தார்கள் என்றும் கூறுவார்கள். அறிவிப்பவர்: நாபிஃ நூல்: அபூதாவூத்

    உங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுதால் அதன் பின்பு நான்கு ரக்அத்துகள் தொழுவாராக என்று அல்லாஹ்வின்  தூதர்
صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  நூல்: முஸ்லிம், திர்மிதி,  நஸயீ, அபூதாவூத்

    மேற்கண்ட ஹதீஸ்களில் ஜும்ஆவுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்துகள் என்றும் நான்கு ரக்அத்துக்கள் என்றும் இரண்டு விதமாக கூறப்பட்டுள்ளது.எனினும் முதலாவது ஹதீஸில் நபி
صلى الله عليه وسلم அவர்கள் தமது வீட்டிற்குச் சென்று இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள் என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது.

    இரண்டிரண்டாகத் தொழுதல்

    இரவிலும் பகலிலும் இரண்டிரண்டாகத் தொழ வேண்டுமென்று நபி
صلى الله عليه وسلم
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்:நஸயீ,தாரமீ

    உங்கள் இல்லங்களில் சில தொழுகைகளைத் தொழுங்கள். அவற்றை அடக்கஸ்தலங்களாக ஆக்கி விடாதீர்கள் என நபி
صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி

    தஹிய்யத்துல் உலூ

    ஒரு ஃபஜ்ருத் தொழுகையின் போது பிலால் (ரலி)யிடம் "பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்போசையை சுவர்க்கத்தில் நான் கேட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர்
صلى الله عليه وسلم
அவர்கள் கேட்டார்கள்.

    அதற்கு பிலால் (ரலி) "இரவிலோ பகலிலோ நான் உலூ செய்தால் அவ்வுலூவின் மூலம் நான் தொழ வேண்டும் என்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல்" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி

    தஹிய்யத்துல் மஸ்ஜித்

    மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர்
صلى الله عليه وسلم அவர்கள் அமர்ந்திருக்கும் போது நான் பள்ளிக்குள் நுழைந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள், "நீ உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க எது தடையாக அமைந்தது" என்று கேட்டார்கள்.

    அதற்கு,"நான் அல்லஹ்வின் தூதரே! நீங்கள் உட்கார்ந்து இருப்பதைக் கண்டேன். மக்களும் உட்கார்ந்து இருக்கின்றார்கள். (அதனால் நான் உட்கார்ந்து விட்டேன்)" என்று பதில் சொன்னேன்.

    உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்ததும்  இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர்
صلى الله عليه وسلم
அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ

    லுஹா தொழுகை

    உங்களில் ஒருவர் தனது எலும்பு மூட்டுகளுக்காக தர்மம் வழங்க வேண்டும்.

    (நீங்கள் கூறுகின்ற) ஒவ்வொரு சுபுஹானல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு லாயிலாஹ இல்லல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் தர்மமாகும். நன்மையை ஏவுவதும் தர்மமாகும். தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். முற்பகல் நேரத்தில் இரண்டு ரக்ஆத்துகள் தொழுவது இவை அனைத்திற்கும் போதுமான தாகும்  என்று நபி
صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூத்

    யார் உலூச் செய்தவராக கடமையான தொழுகைக்குப் புறப்பட்டு வருகின்றாரோ அவரது கூலி இஹ்ராமுடன் ஹஜ் செய்தவரின் கூலியை போன்றதாகும். யார் லுஹா தொழுகையைத் தவிர வேறு எதற்காகவும் தன்னை சிரமப் படுத்திக் கொள்ளாமல் புறப்பட்டு வருகிறாரோ அவரது கூலி உம்ரா செய்தவரின் கூலியைப் போன்றதாகும் இரு தொழுகைகளுக்கிடையே எவ்வித தீமையான காரியமும் இல்லாமல் ஒரு தொழுகைக்குப்பின் இன்னொரு தொழுகையைத் தொழுபவரின் தொழுகையானது இல்லியீன்களில் பதிவு செய்யப்படுகின்றது  என்று அல்லாஹ்வின்  தூதர்
صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி) நூல்: அபூதாவூத்

    கிரகணத் தொழுகை

    நாங்கள் நபி
صلى الله عليه وسلم அவர்களிடம் இருந்தோம். அப்போது சூரிய கிரகணம் ஏற்ப்பட்டது. உடனே, நபி صلى الله عليه وسلم
அவர்கள் மேலாடை இழுபட(வேகமாக)பள்ளிக்குள் நுழைந்தார்கள் கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்துகள் தொழவித்தார்கள். எவரது மரணத்துக்காகவும் சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. எனவே அவ்விரு கிரகணங்களையும் காணும் போது தொழுங்கள். உங்களுக்கு ஏற்ப்பட்டது விலகும் வரை துஆச் செய்யுங்கள்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி) நூல்:புகாரி


    நபி
صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகைக்கு தாயாராகுங்கள்) என்று பிரகடனம் செய்யப்பட்டது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமிர் நூல்:புகாரி, முஸ்லிம்

    பயணத்திலிருந்து வந்ததும் தொழுகை

    அல்லாஹ்வின் தூதர்
صلى الله عليه وسلم
அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளி வாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்துகள்  தொழுவார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக்(ரலி) நூல்: புகாரி